பாண்டேவும் கருங்குரங்கும்

ஜூலை  2017 உயிர்மையில் வெளியான கட்டுரை.


உயிர்மை கட்டுரை தலைப்பு :  
வெடிக்கப் போகும் பலூன் !
============================


எழுதியது -ராஜா ராஜேந்திரன்.




ரமணா படத்தில், காவல்துறை மிகக் குழப்பமாய் முழித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், முடிச்சவிழ்ந்து சிக்கல்கள் தீர, ஒரு பொதுக் காரணத்தை துப்பறிந்துக் கண்டுபிடிக்கும்.





அது என்னவென்றால், படத்தின் நாயகன் பணிபுரியும் ஒரு கல்லூரியில், அவரிடம் படித்த மாணவர்கள் மட்டும், தமிழக அரசுப் பணிகளில், தமிழகம் முழுக்க விரவிக் கிடப்பார்கள்.




ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டார்கள்.  அதேவேளையில் அவர்களுடன் பணி புரியும் சக ஊழியர்களில் யார் யார் லஞ்சப் பேர்வழிகள், எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை மட்டும் தங்களின் பேராசிரியர்க்கு(நாயகன்) அப்டேட்டாக அனுப்பி வைத்துக் கொண்டிருப்பார்கள்.





நாயகனின் அந்த முன்னாள் மாணவர்கள், பொதுப்பணித்துறை, காவல்துறை, தொழில், வணிகவரி என்று தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் இருப்பார்கள்.





சரி.  இது நாயகனின் நல் நோக்கத்திற்காக, அதாவது ஊழலை அறவே ஒழிக்க, அவர் ஹிம்சை வழியை நாடுகிறார்.  அதாவது ஆயுதங்கள் மூலம் அவர்களில் தலையாய குற்றவாளியைக் கண்டறிந்துக் கொன்று நடு வீதியில் தொங்க விடுவார்.   இதனால் நம் மாநிலமே ஊழல் செய்ய அஞ்சும்.  ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தும், அவர் கடவுளும் மிக விரும்பும் அந்த சிஸ்டம் சீராகி, நாட்டில் தேனாறும், பாலாறும்......... சரி விடுங்க.  அது இயக்குனரின் பேராசை.




ஆனால் அப்படியெல்லாம் ஓர் இயக்கத்தால் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா ?





ஆம்.  ரமணாக்கள் எல்லாம் மோகன் பகாவத்கள் முன் வெறும் தூசுகள்.  ராஷ்ட்ரீய ஸ்வயம் சங் எனப்படும் ஆர் எஸ் எஸ் ஷாகாக்கள்* இப்படியான ஒரு கூட்டத்தை பல வருடங்களாய் உருவாக்கிக் கொண்டே வருகின்றன.


*ஷாகாக்கள்  = சீருடை அணிந்து உடற்பயிற்சி, தற்காப்புப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி, இந்துத்துவ உபதேசங்கள், கட்டளைகள், இலக்குகள், அதைக் கண்டடைதல், எதிரிகள் யார் என அறிந்துக் கொள்ளுவது, அவர்களை அகற்றுவதற்கான அரசியல்......... இதையெல்லாம் செயல்படுத்தப் பயன்படும் ஒரு கூட்டம்.  வார விடுமுறை நாட்களில், பூங்காக்களில், பள்ளி அல்லது கல்லூரி விளையாட்டுத் திடல்களில் நிகழ்த்தப்படுபவை.


Image result for ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம்
கிட்டத்தட்ட மூளைச்சலவை செய்யப்படும் மதப் பிரசங்கக் கூட்டத்தைப் போலவே இதிலும் வீராவேச உரைகள் நிகழும்.  அதில் மனம் மயங்கி உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்து, தேசத்தின் பால், அதாவது இந்துஸ்தானத்தின் மீது எவர்களுக்கெல்லாம் ஆவேசம் வந்து, என் தாய்நாடு(மதம்) காக்க என்னுயிரையும் தருவேன் என குரல் கொடுக்கிறார்களோ, அவர்கள்தான் மோகன் பகாவத்களின் ஸ்லீப்பர் செல்கள்.




மிகவும் நம்பகத்தன்மையான ஆள், யார் ஆட்சி புரிந்தாலும் தங்களுக்கே விசுவாசமாக இருப்பார் என, ஆழமான ஒரு முத்திரை பதிந்து விட்டால், பிறகு அவருடைய வாழ்க்கை முழுக்க முழுக்க இந்த இயக்கத்தினராலேயே இயக்கப்படும்.  இவர்கள் எங்கு போனால் என்ன காரியம் தங்களுக்குச் சாதகமாக, தங்களின் இலக்கை நிறைவேற்றும் என்று அங்கு இந்த ஸ்லீப்பர் செல்களை அமர வைத்து, பல காரியங்கள் சாதிப்பார்கள்.




என்னடா, இவனும் சமஸ் மாதிரி பூச்சாண்டி காட்டுகிறானே ? அவ்ளோவ் பெரிய அப்பாடக்கர்களா அவர்கள் என மிரளத் தேவையில்லை.  இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல.  மதத்தை ஓர் ஆயுதமாகவும், கேடயமாகவும் உபயோகித்து, முட்டாள் அடிமைகளைத் தொடர்ந்து எப்படி உருவாக்கி வருகிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டும் ஒரு முயற்சி மட்டுமே.





ஆனால் அவர்கள் காத்திருக்கிறார்கள்.  தங்களின் காலம் கனியும் வரை பொறுமையாக, இரை தங்களின் அருகே வரும் வரை ஒற்றைக்காலில் கொக்கு போலக் காத்திருக்கிறார்கள். 





வாஜ்பாய் போன்ற தங்கள் ஆட்களின் மைனாரிட்டி ஆட்சியின் போதெல்லாம் அவர்கள் தங்களின் சுயரூபத்தை பெரிதாக வெளிக்காட்ட விரும்புவதில்லை.




இதோ 2014 -ல் நிகழ்ந்ததைப் போன்று ஒரு பிரம்மாண்ட பலத்துடன் தனிக்கட்சியாக ஆள வாய்ப்பு வரும்போது, தங்களின் ஸ்லீப்பர் செல்களை எல்லாம் எழுப்பி விட்டு, நாடே இந்த ஷாகாக்களின் எந்தச் செயல்களையும் ரசிக்கிறது, பாராட்டுகிறது, ஏற்கிறது என்றெல்லாம் மொத்த மக்களையும் நம்ப வைப்பதில் மும்முரமாகச் செயல்படுகிறார்கள்.



 
நீதித்துறை, அரசியல், ஊடகங்கள், நிதி திரட்ட வணிகர்கள், ஆட்சிப்பணி, கல்வி, அறநிலையங்கள், விளையாட்டு, சமூக வலைத்தளங்கள், சினிமா, காவல்துறை, அயலகப் பணி...... இப்படி நாட்டின் மிக மிக முக்கியமாக இருக்கும் எல்லாத் துறைகளிலும் இந்த ஸ்லீப்பர் செல்கள் ஊடுருவி இருக்கிறார்கள். 





அதிகாரம் அவர்களின் கைகளில் முழுக்க முழுக்க வரும்போது, தங்களின் ஸ்லீப்பர் செல்கள் இவர்கள்தான் என கண்டறிகிறார்கள்.  அவர்களுக்கு நினைவூட்டுகிறார்கள்.  உங்களின் சேவை இப்போது எங்களுக்கு அவசியம் தேவை என அவர்களுக்குத் தேவையான வேலைகளைச் சாதித்துக் கொள்கிறார்கள்.




நமக்கு இங்கு ஏகப்பட்ட சேனல்கள் இருப்பதால் பொதுவாகவே இப்போது நாம் வடக்கின் பல செய்திச் சானல்களை பெரும்பாலும் தவிர்த்தேக் கிடக்கிறோம்.





ஒரே ஒரு நாள், முழுக்க முழுக்க நம் சேனல்களைத் தவிர்த்துவிட்டு, வடக்கின் செய்தி சேனல்களை மட்டுமே பார்த்தால் போதும்.  கிட்டத்தட்ட 99 விழுக்காடு ஊடகங்கள் முழு வலதுசாரிகளாக மாறி, எல்லா ஸ்லீப்பர் செல்களும் முழித்துக் கொண்டதைப் போன்ற ஒரு பிரமிப்பை / பயத்தைத் தந்துக்கொண்டிருப்பது புரியும்.




சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று ஒரு வீடியோ.  எங்கு தாக்கினார்கள் ?  யாரைத் தாக்கினார்கள் ? எத்தனை பேரைக் கொன்றார்கள் ?  அதற்கு ஆதாரம் என்ன ?  ம்ஹூம் இப்படி எந்த ஒரு கேள்வியையுமே கேட்காமல், ராணுவம் தந்த அல்லது பாதுகாப்பு அமைச்சகம் தந்த வீடியோ காட்சிகளை நாள்தோறும் ஒளிபரப்புவார்கள்.  அவர்கள் சொன்னதை அல்லது சொல்லிக் கொடுத்ததை மட்டும் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பும்போது சொல்லியவண்ணம் இருப்பார்கள். 




நாடு ஏதொ மாபெரும் சாதனையைச் சாதித்து, இந்திய எல்லையில் இருந்த மொத்த எதிரிகள் கூட்டமே சின்னாபின்னமானது போன்ற பெரும் வீரப்பிரதாபம் கட்டமைக்கப்படும். 





கொஞ்சம் உற்று நோக்கினால் லடாக் எல்லையிலோ, அருணாச்சலப் பிரதேச எல்லையிலோ, சீனாவுக்கெதிராக இப்படிப்பட்ட ஸ்ட்ரைக்குகள் ஒருபோதும் நிகழவேச் செய்யாது.  பாகிஸ்தான் எல்லையில் மட்டுமே நிகழும்.  பாகிஸ்தான் மட்டுமே நம் பிரம்மாண்ட எதிரி.





என்ன ஒரு வெட்கக் கேடு ?  நமது தென்னிந்திய அளவு கூட இல்லாத நாடு ? தென்னிந்திய அளவு கூட மக்கள் தொகை இல்லாத நாடு ?  வளர்ச்சியில் நம்மை விட எல்லாத் துறைகளிலும் மிகவும் கீழாக இருக்கும் ஒரு நாடு ?  மக்களாட்சியில் அடிக்கடி தோல்வியைத் தழுவிக் கொண்டே வரும் ஒரு மதவாத நாடு ? ........ இது எப்படி நம்முடைய போட்டி நாடு அல்லது எதிரி நாடாக இருக்க முடியும் ?  ஒரே ஒரு காரணம் அது இஸ்லாமிய நாடு.  இஸ்லாமியர்கள் இந்துத்துவாக்களின் மாபெரும் எதிரிகள்.  அவ்வளவுதான்.







எல்லா ஊடகங்களிலும் இணை ஆசிரியர் பதவிகளிலாவது தாங்கள் சொல்லும் ஆட்களை நியமிக்குமாறு, இந்த இந்துத்துவ இயக்கங்களின் பரிந்துரைகள் வடக்கு ஊடகங்கள் முழுக்க உண்டு என்கிற ஒரு சேதியை வாசித்தேன்.  என்டிடிவி  விஷயத்தில் அது பலிக்காதபோது, எதிர்விளைவு கொஞ்சம் மோசமாக இருந்ததையும் பார்த்திருப்போம்.






மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதப் பைத்தியங்கள் பெருகும்போது இப்படிப்பட்ட விபத்துகள் நிகழத்தான் செய்யும்.  எல்லாம் தற்காலிகமானவைகள்.  மக்கள் முழித்துக் கொள்ளும்போது முற்றிலுமாக சில வருடங்கள் செல்களின் செயல்கள் முடங்கிப் போய்விடும்.




சரி, கட்டுரைத் தலைப்புக்கு வருவோமா ?



Image result for பாபர் மசூதி இடிப்பு


பாபரி மஸ்ஜித் என்கிற ஒரு கட்டுரைத் தொகுப்பை வாசிக்க எடுத்தேன்.  ஆசிரியர் மு.குலாம் முஹம்மது.  நான்காவது பதிப்பாக, பல ஆவணங்கள், தீர்ப்புகளின் சிறு குறிப்புகள் சேர்க்கப்பட்டு 2012-ல் வெளியான ஒரு தொகுப்பு.  முழுக்க முழுக்க இஸ்லாமியப் பார்வையில் செல்லும் ஒரு நூல்தான்.





பாபர் மசூதி - ராம ஜென்மபூமி டிஸ்ப்யூட் வெகு தீவிரமாக, மாபெரும் அரசியல் திருப்புமுனை காரணியாக 1986- களில் இருந்தபோது, நிகழ்ந்த ஓர் அதி முக்கியமான சம்பவம், தகுந்த ஆதாரங்களுடன் விளக்கப்படுகிறது.





பல நூற்றாண்டுகளுக்கு முன், முகலாயர்களால் கட்டப்பட்ட இந்த மசூதி, முகலாய அரசன் ஜஹாங்கீர் காலத்தில்தான், பாபர் மசூதி எனப் பெயர்ச் சூட்டப்பட்டு, இஸ்லாமியர்களின் தொழுகைக்காகத் திறந்துவிடப்படுகிறது.




அது ஷியா - சன்னி முஸ்லீம்கள் இருவரும் சேர்ந்து தொழ அனுமதிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசல்.





அது ராமர் பிறந்த அல்லது அவர் கோயில் இருந்த ஓர் இடம்.  அதைத் தகர்த்துவிட்டே அந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டதாக இந்துக்களின் குற்றச்சாட்டு.






இந்து - முஸ்லீம் மதத்தினர்க்கிடையேயான இந்தப் பள்ளிவாசல் சர்ச்சையில், சன்னி - ஷியா முஸ்லீம்களுக்கிடையேயே ஒரு சண்டை வருகிறது.  மசூதி யாருக்குச் சொந்தம் என்று.  1940-ல் வழக்கு நீதிமன்றம் போனபோது, வழக்கு சன்னி முஸ்லீம்களுக்குச் சாதகாமகத் தீர்ப்பு வருகிறது.





அதன்பின், அந்த மசூதிக்கு இன்னும் எதிரிகள் அதிகமாகி விடுகிறார்கள்.  மசூதிக்குள் குழந்தை ராமர் சிலைகள் இருப்பதாகவும், தங்களை மசூதியில் நுழைய அனுமதித்தால் அதை உலகுக்கு காட்டுவோம் என்று நாக சாதுக்கள் எனப்படும் இந்துக்கள் தொடர்ந்து அங்கு முகாமிடுகிறார்கள்.  அதிகாலை தொழுகைக்குச் செல்லும் முஸ்லீம்களை இருளைப் பயன்படுத்தி கல்லெறிந்து தாக்குகிறார்கள்.





இந்த நாகா சாதுக்கள், துறவிகளிலேயே போர் வீரர்கள் என்றழைக்கப்படுபவர்களாம்.  கும்பமேளாக்கள் நிகழும் நேரங்களில் இவர்களின் அணிவகுப்பை ரசிக்க பல லட்சம் பேர் கூடுவார்கள்.  ஆயுதம் வீசி, புஜ பலாக்கிரமங்களுடன் இருக்கும் சாதுக்கள் (!)





23/12/1949 முன்னதிகாலை 4 மணி.  தொழுகைக்காகச் சென்ற இஸ்லாமியர், அங்கு திடீரென முளைத்து நின்ற ராமர் சிலைகளைக் கண்டு மிரண்டு, காவல் நிலையத்திற்கு ஓடி வருகிறார்கள்.





அப்போது அயோத்தி நகரம் இருந்த பைசாபாத் தலைமை நீதிபதி கே.கே. நய்யார் வசம் விவகாரம் போகிறது.  அவர் சிம்பிளாக, மசூதியை மூடிவிடுவோம், அது மட்டுமே பிரச்சினையைக் குறைக்கும் என உத்தரவிட்டு விடுகிறார்.  அத்துடன் அந்த மசூதியில் தொழுகை முற்றிலுமாக முடங்கிப் போகிறது.




என்ன கூத்து என்றால், இந்த நய்யார்தான் இந்திய அளவில் இந்துத்துவா இயக்கங்களின் முதல் ஸ்லீப்பர் செல்.





ஏனென்றால், இப்படி சிலைகளை நிறுவ சதியாலோசனைகளும், ஒத்திகைகளும் நடக்கின்றன என்று பைசாபாத் எஸ்.பி திரு.கிர்பால் சிங், நய்யாருக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வைத்திருக்கிறார்.  ஒன்றல்ல, இரண்டல்ல பல கடிதங்கள்.




இப்படி எஸ்.பி எழுதிய ஒரு கடிதத்தைக் கூட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் நடைபெற்று வரும் ஒரு சர்ச்சை வழக்கில், நீதிமன்றத்தில் ஆதாரமாய் அரசு சமர்ப்பிக்கவே இல்லை.





செப்டம்பர் 30, 2010-ம் ஆண்டு இந்தக் கடிதங்கள் முதன்முறையாய் நீதிமன்றங்களில் சமர்பிக்கப் படுகின்றன.  அதுவரை அயோத்தியின் வெளியுலக இஸ்லாமியர்களில் பலரே கூட, சிலைகள் ஆதி காலத்திலிருந்து உள்ளேயேதான் இருந்திருக்கின்றன போல என்று நினைத்திருக்கலாம்.





கே.கே. நய்யார், சிலைகள் நிறுவப்பட்ட அந்த மசூதியை முழுக்க தன் அதிகாரத்தின் கீழ் கையகப்படுத்தி, மசூதியின் எல்லாக் கதவுகளையும் மூடி, ஒரே ஒரு கதவை மட்டும் திறந்துவிடச் சொல்லி, அங்கு நிறுவப்பட்ட ராமர் சிலைகளுக்கு பூஜைகள் செய்ய அனுமதி தருகிறார்.




முஸ்லீம்கள்,  ’மசூதி திடுமென பாலராமர் கோயிலாகிப் போன அவலத்தைப் பாரீர் ‘ என பிரதமர் நேருவுக்கு தொடர்ந்து புகார் கடிதங்களை அனுப்புகின்றனர்.





நேரு, அப்போதைய உத்திரபிரதேச முதல்வரான  கே.சி.பந்த்திற்கு ஒரு தந்தியை அனுப்புகிறார்.




Dangerous example is being set there, which will have bad consequences





முதல்வர், பிரதமரின் தந்திக்கு மதிப்பளித்து, மாவட்ட தலைமை நீதிபதி கே.கே. நய்யாருக்கு இரு கேள்விகளை அனுப்பி வைக்கிறார்.




1.) சிலைகள் நிறுவியதை ஏன் தடுக்கவில்லை ?


2.) சிலைகளை இன்னும் ஏன் அகற்றவில்லை.


27/12/1949 அன்று அக் கடிதம் கே.கே. நய்யாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.  கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தவர் அரசின் முதன்மைச் செயலாளர்.





நய்யார் பதில் கடிதத்தை இப்படி எழுதுகிறார். 



பள்ளிவாசலில் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடந்துவருவதால், இனி எங்களால் அங்கு தொழுகை செய்ய முடியாது என இஸ்லாமியர்கள் மறுத்துவிட்டனர்.  பள்ளிவாசலை முழுக்க இந்துக்களுக்கே கொடுத்துவிடும் படி சொல்லியும் விட்டார்கள்.  அதற்கான ஆதாரங்கள் என்று 15 இஸ்லாமியர்களின் பெயரும், கையெழுத்துகளும் அந்தக் கடிதத்தில் இருந்தன.




ஆனால் இது நய்யாரின் சூது என்று இஸ்லாமியர்கள் மீண்டும் பிரதமருக்கும், அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கும் கடிதங்களை அனுப்ப, மீண்டும் முதல்வர் நய்யாருக்கு, உடனடியாக அச் சிலைகளை பள்ளிவாசலிலிருந்து அகற்றுமாறு ஆணை இட்டு கடிதம் எழுத, நய்யாரின் பதில் இப்படி இருந்திருக்கிறது.




Have them removed ?  Remove me.  But I will not get them removed.




நாடு விடுதலை அடைந்து, இணைப்புக்காக நடந்த போர்கள், கலவரங்கள், காந்தி படுகொலை என ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்த நேரம் போல ? கே.கே. நய்யாரின் இந்தக் கூத்துக்கு எந்த மேலதிக நடவடிக்கைகளுமே நிகழவில்லை.




இத்தனைக்கும் பாதுகாவலர் படைகளையும் அத்துமீறி, மசூதிக்குள் சிலைகளை நிர்மாணித்தார்கள் என்று F I R ஒன்றையும் பதிந்திருக்கிறார்கள்.  சிலைகள் வைக்கப்பட்ட உடன் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அது.  FIR No.1949, US 147/295/448, DT- 23/12/1949.





குற்றத்தைச் செய்தவர்கள் என்று ராம்தாஸ், சுக்லாதாஸ், சுதர்சனதாஸ் உட்பட 60 பேர்கள் வரை எஃப் ஐ ஆரில் குற்றம் சாத்தப்பட்டிருந்தது.  ஆனால் இன்றையத் தேதிவரை கூட அந்த எஃப் ஐ ஆரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை.





சரி.  இந்த கே.கே. நய்யார் எப்படி ஸ்லீப்பர் செல் ?  என்ன ஆதாரம் ??





நான்காவது நாடாளுமன்றத் தேர்தலில், ஜன்சங் கட்சி சார்பாக பாக்ரைச் என்கிற உ.பி மாநிலத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் கே.கே. நய்யார்.  அவர் மனைவி சகுந்தலாவும்.  ஜன் சங்தான் பிற்பாடு பாரதீய ஜனதா பார்ட்டி என மாற்றிக் கொண்டது என உங்களுக்கேத் தெரியும்.




இன்னும் நம்ம தலைப்புக்குள்ளயே போகலல்ல ?




கி.பி.1986.
இந்தச் சிலைகளுக்கு நடக்கும் பூஜைக் கூத்துக்கள் பொதுமக்களுக்கானது அல்ல.  நய்யார் நியமித்த பூசாரிகள் அல்லது அவர்களது வாரிசுகள் மட்டும் ஒரே ஒரு வாசல் வழியேச் சென்று பூஜைகள் செய்துவிட்டு வருவார்கள்.  தொழுகை சமாச்சாரம் 1949 டிசம்பரோடு முடிவுக்கு வந்த ஒன்று.  இந்த நிலை, 37 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்வது இந்துத்துவர்களுக்கு ஒவ்வவே இல்லை.  எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்டு, மக்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து நீதிமன்றம் போனது இந்து அமைப்புகள்.





எல்லா மனுக்களும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்படவே.......... ரமணா பட டெக்னிக் ஒன்றைச் செய்ய முயல்கிறார்கள்.





பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு தங்கள் ஆள் ஒருவரையே தலைமை நீதிபதியாகக் கொண்டு வந்துவிட்டால் ?





அவர்தான் நம் நாயகர் கே.எம். பாண்டே.  இதற்கான ஆதாரங்கள் யாவும் அவர் எழுதிய சுயசரிதையான VOICE OF CONSCIENCE (மனசாட்சியின் குரல்) என்கிற நூலிலிருந்தே கிட்டுகின்றன.




தன் நூலில் அவர் இவ்வாறு விவரிக்கிறார் ;


“ தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின் பைசாபாத் சென்று, ராமஜென்ம பூமியையும் சென்று பார்த்தேன்.  அப்போது கோயிலுக்குள் யாரும் செல்ல முடியாது.  காரணம் வாசலில் பூட்டுக்கள் போடப்பட்டிருந்தன.  சில பூஜாரிகள்தான் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் (பாண்டே கோயில் கோயில் என எழுத, கட்டுரை ஆசிரியர் ஒவ்வொரு கோயிலின் பக்கத்திலும் பள்ளிவாசல், பள்ளிவாசல் என அடைப்புக் குறிக்குள் எழுதுகிறார்.  அவர் பதட்டம் அவருக்கு, பாவம் ;) )





அதில் ஒரு பூஜாரி என் வழிகாட்டியாகச் செயல்பட்டவர்.  மிகவும் புத்திசாலி.  அவருக்குப் பழைய வரலாறு தெரியும்.  நான் அவரிடம், ‘பண்டிட்ஜி, எப்படிப் பார்த்தாலும், இது ஒரு வழிபாட்டுத் தலம்.  ஒன்று இது மசூதியாகச் செயல்பட வேண்டும்.  அல்லது ஒரு கோயிலாகச் செயல்பட வேண்டும், அப்படித்தானே ? என்றேன்.




அந்த மொத்த இடம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. 





கடந்த 35 ஆண்டுகளாக வழக்குகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.  1934-க்குப் பிறகு இந்த இடம் மசூதியாகச் செயல்படவில்லை என்றார் அந்தப் பூஜாரி.





நான், ’ஏன் வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்படவில்லை ?’ என்று கேட்டேன்.





“ஒருவேளை அந்த நீதிபதி பிறக்கவில்லை போலும் “ என்று அந்த பூஜாரி கூறினார். 





ஆதாரம் - Voice Of Conscience, By Justice K.M.Pandey.  Page no.212 & 213.



இந்த நிகழ்வுக்குப் பின், சில நாடகங்கள் நிகழ்கின்றன.  நம் பாண்டே முன், ஒரு மனு சமர்ப்பிக்கப்படுகிறது.





மனுவில், ” எல்லாப் பூட்டுகளையும் கேட்டுகளையும் திறந்து விட வேண்டும்.  மக்கள் சிலைகளைத் தரிசிக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் “ என்றிருக்கிறது.





தீர்ப்பில் இப்படி தாம் குறிப்பிட்டதாக பாண்டே தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.




“ எதிர்பாராத விதமாக ஒரு மேல்முறையீடு எனக்கு முன்னால், இந்தப் பூட்டுக்கள் தொடர்பாகவே சமர்ப்பிக்கப்பட்டது.  நான் இந்த விவகாரத்தை இத்தோடு இறுதியாக முடித்துவிடுவதே பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தேன்.  வழக்கை 01/02/1986 -ற்குள் முடித்துவிடுவதாகவும் சொல்லி இருந்தேன்.  அதன்படியே, எல்லாப் பூட்டுகளையும் திறந்து விடும்படி தீர்ப்பளித்தேன் “






மாலை 04:40 ற்கு வழங்கப்பட்டது தீர்ப்பு.  20 நிமிடங்களுக்குள் அனைத்துப் பூட்டுகளும் திறக்கப்பட்டது.  நீதிமன்றத் தீர்ப்பின் நகல்கள் கூட கைக்கு வராத நிலையில், இதெல்லாமே இந்துத்துவர்களின் சிறந்த முன்னேற்பாட்டுடன் செயல்பட்டதை உலகுக்கு நிருபித்தது.






மன்னிக்கணும்.  இதோ வந்துட்டோம் அந்தத் தலைப்புக்கு ;) 
நீதியரசர் பாண்டே தொடர்கிறார் ;





நான் அந்தப் பூட்டுத் திறக்கும் உத்தரவைப் பிறப்பித்த நாளில், ஒரு கறுப்புக் குரங்கு, நீதிமன்றத்தின் கூரையின் மேல், நாள் முழுவதும் வீற்றிருந்தது.



அது அங்கிருந்த கொடிக் கம்பத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டே இருந்தது.   நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை செவிமடுக்க, பைஸாபாத்திலிருந்தும், அயோத்தியாவிலிருந்தும் வந்து குழுமியிருந்த மக்கள் அந்தக் குரங்குக்கு நிலக்கடலை, பலவகைப் பழங்கள் இப்படி எத்தனையோ காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.




ஆனால், அந்தக் காணிக்கைகள் எதையுமே அந்தக் குரங்கு தொடவே இல்லை.  மிக அரிதான நிகழ்வு அது.   நான் மாலை 04:40 ற்கு தீர்ப்பு தந்த மாத்திரத்தில் அது அந்த இடத்தை விட்டு அகன்றது.




பின், நான் என் மாளிகைக்குத் திரும்புகிறேன்.  மாவட்ட நீதிபதியும், தலைமைக் காவல் கண்காணிப்பாளரும் என்னுடன் வந்தார்கள்.  அங்கே, என் வீட்டு வராந்தாவில் அதே குரங்கு இருந்தது.  நான் அதை வணங்கினேன்.  அதை ஒரு தெய்வீக சக்தி என எடுத்துக் கொண்டேன்.





இதை வட்டார பத்திரிக்கைகள் அனைத்தும் வெளியிட்டிருந்தன.  நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதற்கு சாட்சி.




ஆதாரம் - Voice Of Conscience, By Justice K.M.Pandey.  Page no.215.


Image result for k m pandey






பிற்பாடு கல்யாண்சிங்(1991) முதல்வரான பின், 1992 -ல் பாபர் மசூதி முழுக்கத் தகர்க்கப் பட்டபின், 1993 -ல், நம் கருங்குரங்கு பக்தர் பாண்டேவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவி கிட்டுகிறது.  இதுவே காலந்தாழ்ந்த, கொடுத்த வாக்குக்கு மீறி, தாமதமாகக் கிட்டிய பரிசு என்று சலிப்புடன் சொல்கிறார் பாண்டே.





சமீபத்தில், மாடுகளைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என ஆலோசனைகள் வழங்கிவிட்டு ஓய்வுபெற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சர்மா வழங்கிய தீர்ப்புக் குறிப்புகளை வாசித்திருப்பீர்கள். 





அவர் பசு பால், பசு கோமியம், பசு கொம்புகளின் வீரியம் பற்றி மட்டும் ஆச்சர்யப்படவில்லை.  ஆண் மயிலின் பிரம்மச்சரியம் பற்றிப் பெருமிதப் பட்டதும், அதன் கண்ணீரை அருந்தியே பெண் மயில்கள் கர்ப்பமாவதாகவும் சிலாகித்ததைக் கண்டு, அதிராத வாசகர்களே இருந்திருக்க முடியாது. 




நன்கு நினைவில் வையுங்கள், அவருக்கு நெடு நாட்களாக காலியாக இருக்கும் கிண்டி ராஜ்பவன் அரியணையை அலங்கரிக்க கூட வாய்ப்புகள் வரலாம்.  இன்னொரு கிரண்பேடியாக அவர் தமிழக ஆட்சியாளர்களைக் கலக்கவும் செய்யலாம்.




இறுதியாக ஒன்று.  போன வருடம்(2016) ஜூன் மாதம் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்ற பத்தாம் நாள்.  உயிர்மையின் தலயங்கத்தில் மனுஷ்யபுத்திரன் தன் இறுதிவரிகளை இப்படியாக முடித்திருந்தார்.





“ இது கடப்பதற்கு கடினமான ஒரு காலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  ஆனால், இது சீக்கிரமே கடந்துவிடும் என்கிற இனம்புரியாத நம்பிக்கை எதனாலோ ஏற்படுகிறது “





இது மனதில் ஆழப்புதைந்த மிகவும் பிடித்தமான ஆறுதல் ததும்பிய ஒரு பத்தி.




இன்றைய நிலைக்கும் இப்படி ஏதேனும் ஆருடம் சொல்லி எங்களைத் தேற்றுங்களேன் சார் எனக் கோரினேன். 





" எந்த ஒரு மோசமான விஷயமும், அதன் உச்சத்திற்குப் போக வேண்டும்.  அப்போதுதான் அது அழியும்.  நாம் தீமைகளை உச்சத்திற்குப் போக விடுவோம் "





அது சரி.  நீட், ஜிடிபி, மாட்டு வணிகம், பண மதிப்பு நீக்கம், பொருளாதார சீர்குலைவு, இந்தி திணிப்பு, கீழடி, ஹைட்ரோ கார்பன், வறட்சி, காவிரி, ஜல்லிக்கட்டு............ தீமை பலூன் அளவுக்கு மீறி உப்பிவிட்டது, வெகு விரைவில் வெடிக்கத்தான் போகிறது.




முற்றும்.

எழுதியவர் - ராஜா ராஜேந்திரன், சென்னை -21.
மின்னஞ்சல் - rashraja1969@gmail.com
வலைப்பூ - raja-rajendran.blogspot.in
அலைபேசி : 98842 17103.
24/06/2017 சனிக்கிழமை, இரவு 9 மணி.  




 



















 









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!