கரிக்கும் கண்ணீர் !!!
ஆனால் நீங்கள்
உச்சிவெயிலில்
அண்ணாசாலையில்
வியர்வை வழிய
பல மணி நேரம்
காத்துக்கிடந்ததில்லை
உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !
உங்களின் வரலாற்றுச்
சிறப்புவாய்ந்த இருப்பிடங்கள்
ஒருபோதும் எவராலும்
பறிக்கப்பட்டிருக்காது
உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !
மகாமக ஜலக்கிரீடையில்
உங்கள் வீட்டாட்கள்
எவருக்கும் காயம் கூட
ஏற்பட்டிருக்காது
உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !
ஏன் என்றவுடன்
ஆட்டோவும்
எதற்கென்றவுடன்
அரிவாளும்
உங்களை நோக்கி
வந்தே இருக்காது
உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !
ராஜா வீட்டுக் கல்யாணத்தை
கேள்விப்பட்டிருப்பீர்கள்
நேரில் பார்த்தனுபவிக்கும்
பரவசத்தைக்
கொடுத்தவரல்லவா அவர்கள்
உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !
இறந்தகாலத்தில்
எவன் எக்கேடு
கெட்டிருந்தால் எனக்கென்ன ?
நிகழ்காலத்தில்
என் வாழ்வை
வளப்படுத்தியவர்கள் வாடினால்
நானழுவேன் எனச் சொல்லும்
உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !!!
நன்றி,
ராஜா ராஜேந்திரன்
சென்னை-1.
கருத்துகள்
கருத்துரையிடுக