நான் போறேன் ஆத்தா வையும் என்னை விட்டுடுங்க !!!

1.) நேரத்தை அநியாயத்திற்கு தின்னும் இந்த ஃபேஸ்புக்கை விட்டு போகிறேன், இதற்கும் லைக் போடும் நல்ல உள்ளங்களே நன்றி.........



2.) காந்தி ஒரு பிரிட்டீஷ் ஏஜண்ட், தலித் விரோதி, இந்துக்களின் எதிரி, நாட்டை நாசமாக்கிய பொ பொ கிழவன்..............



3.) பெரியார் தமிழனே கிடையாது, ஹிந்துக் கடவுள்களை அசிங்கப்படுத்திய மிருகம், மூத்திரம் பெய்யக் கூட எழமுடியாத  நிலையில் தன் வயதில் பாதியிராத பெண்ணை மணந்த நீசன்..........


4.) திராவிடர், தேசியப் போர்வையில் நம்மைச் சுரண்டிய தமிழரல்லா வந்தேறிகளைத் துரத்துவோம், அகண்ட தமிழ்த்தேசியம் அமைத்து, முப்பாட்டன் கெளபீனத்தை அரியணையில் வைத்து நல்லாட்சி செய்வோம்........



மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சில மாதிரிகள்தான் மாற்றுச் சிந்தனையாளருக்கான இப்போதைய ட்ரெண்ட்.  இதுபோல மாற உங்களுக்குச் சில தகுதிகள் வேண்டும்.



நீங்கள் நிறைகுடமாய், முழு வேக்காடாய் இருந்தும், இங்கெழுதுவது களைகளுக்கு வார்க்கும் நீர், மாறாக உங்கள் ப்ளாகில், பத்திரிகைகளில் எழுதுவது, நாவல்கள், கவிதை, சிறுகதைத் தொகுப்பு வெளியீடுகளில் கவனம் செலுத்துவது  நாட்டுக்கும் வீட்டுக்கும் தமக்கும் நல்லது என்று நம்பும் அறிவுஜீவிக் கூட்டங்கள் வெளியிடுவதுதான் முதல் ஸ்டேட்மெண்ட்.  அது உண்மையும் கூட ;)



நீங்கள் மேதைதானென உங்களை நம்ப ஆரம்பித்துவிட்டால்,  உடனடியாக உங்களின் எல்லா சமூக வலைத்தளக் கணக்குகளையும் முடக்கிவிட்டு, கண்ணாடி முன் நின்று பார்த்து பெருமைபடுங்கள், உங்கள் தலைக்கு பின்னால் நிச்சயம் ஓர் ஒளிவட்டம் தெரியும், அது ஒரு குறியீடு.


Image result for facebook 99 days freedom

அதாவது இனி உங்கள் வாழ்க்கை அதி பிரகாசமாகப்போகிறது ;) ( நான் ஹால்ஃப்பாய்ல் என்பதால் எனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை, இன்னும் நான்கு இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டால் வந்துவிடும், ஆக விரைவில் உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்வேன், அப்போது அவசியம் வாழ்த்த வேண்டும் நண்பர்களே ;) )



சரி அடுத்து அந்த அரையாடைக் கிழவன்.   நான் திரும்பத் திரும்பச் சொல்வது இதைத்தான்.  காந்தியைத் திட்டினால் உங்களுக்கு மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்கும்தான், ஆனால் அந்தக் கிழவன் எழுதிய சத்தியசோதனையை முழுதாகப் படித்து விட்டாவது திட்டுங்கள் என்பதே என் வேண்டுகோள்.  இதை வலியுறுத்தியே இன்று தினமணியில் ஒரு  நடுபக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார் திரு.பெ.சிதம்பர நாதன். (கீழே கட்டுரையின் தேர்ந்த பத்திகளை எழுதியிருக்கிறேன்)


Image result for markandey katju
தாலி ஆஃப்ட்ரால் சங்கிலி என்று எழுதியவுடன் உன் அம்மா தாலிய அறுத்துட்டு எழுது, உன் பொண்டாட்டி தாலிய அவுத்துட்டு பேசு என்பவர்களே, ஐயா நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டும் ஆகாது, அதில் பகுத்தறிதல் மற்றும் பெண்ணுரிமை, சக மனிதரை மனிதராகவே மதித்தலும் உட்படும் என்று பலமுறை சொல்லிவிட்டேன்.



ஆக என் வேலை ’தாலி ஒரு புனிதம் & பாதுகாப்பு’ என்று கூறி, அதையும் பெண்கள் மட்டுமே அணிந்தால் தனி சக்தி கிடைக்கும் என்று கூறப்படும் பொய்களை உடைக்கும் கலகம்தானேயன்றி, என் மனைவி, தங்கைகள் கழுத்தில் இருப்பதை அறுத்து என்னை புரட்சிவாதி என்று நிறுவுவது அல்ல, பிறகு உங்களுக்கும் எனக்கும் என்னதான் வித்தியாசம் ?   மாறாக அது ஒரு சுமை என என் மனைவி அகற்றினால் நான் அந்த விடுதலைச் சிந்தனையை போற்றுவேனேயன்றி பயப்பட மாட்டேன்.


’குங்குமத்தால் நெற்றியும் வகிடும் அலர்ஜியில் புண்ணாகிவிட்டது இனி வைக்கப்போவதில்லை’ என்கிற சாக்கில் அவளால் சக அடிமைகளின் வாயிலிருந்து தப்ப முடியுமெனில் அந்த அறிவை வியந்து ரசிப்பேன், ஆனால் அவள் விருப்பம் மீறி என் புகழுக்காக, என் சுயத்தை  நிருபிக்க உங்களைப் போல வீட்டுப் பெண்களை ’நீ என் இஷ்டப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று வலுக்கட்டாயப் படுத்த மாட்டேன்.

Image result for மாட்டுக்கறி
மாட்டுக்கறி என்பது நீங்கள் சாப்பிடும் ஆட்டுக்கறி, மீன்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, நாட்டுக்கோழி முட்டை போன்ற ஓர் அசைவம் மட்டுமேயன்றி, வேறெந்தப் புனிதமோ / அருவருப்போ அதிலில்லை என்பதும் பகுத்தறிவு எனக்குப் போதித்த பாடம்.



’மாட்டுக்கறி சாப்பிட்டால் கைது’ என்கிற சட்டத்தைப் போன்ற அதீத அபத்தம் உலகின் எந்த மூலையிலும் இருக்க முடியாது.  உடனே வழக்கம் போல ’அவாளை பன்னிக்கறி சாப்பிடச் சொல்வேளா ?’ என்று கேட்பீர்களேயானால் அந்தச் சட்டத்தை இயற்றியவர்களை விட அதி முட்டாள்கள் நீங்களென உங்கள் முதுகைத் தட்டிக்கொண்டு பெருமைப் படுங்கள்.



“ஏன்ய்யா சாப்பிடுறவன சாப்பிடாதீம்பீங்க, சாப்பிடாதவன சாப்பிடச் சொல்வீகளோ, இதென்ன மக்களாட்சியா, கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியா ?”



தமிழ்நாட்டு மாடுகள் எல்லாமே அடிமாடுகளாய் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதால், இன்னும் இருபது வருடங்களில் தமிழ்நாடே மாடுகள் இல்லாத மாநிலமாக ஆகிவிடுமென்றும், இங்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போய்விட்டதால் அது கண்டிப்பாக நடந்துவிடுமென்றும் சில  கம்ப்யூட்டர் மேதைகள்(கோ ஊன் எதிர்ப்பாளர்கள்) உளறியதைப் பார்த்திருப்போம்.  இவர்கள் யாருமே, பஸ், ரயிலில்  போகக்கூடச் செய்யாதவர்கள் போல.  ஏஸி காரில் நகரங்களில் நாலு தெரு பயணித்துவிட்டு புள்ளி விவரங்கள் கூறும் இந்த அறிவுஜீவிகளால்தான் இப்படிப்பட்ட அபத்தச் சட்டங்களையெல்லாம் இயற்றுகிறார்கள்.



பாலுக்காக, தோலுக்காக, எருவுக்காக, உணவுக்காக மாடுகளை பண்ணைகளில், வீடுகளில் எவ்வளவோ வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், இது பிற்காலங்களில் இன்னும் வருவாயை ஈட்டித்தரப்போகும் தொழில் என்பதால் இன்னும் பல லட்சப் பண்ணைகள்தான் உருவாகுமேயொழிய அழியும் இனமாய்யா மாடுகள் ?  போங்கய்யா நீங்களும் உங்க கணிப்பும் :(


அசைவமே தப்புன்றவன கூட நம்பலாம், மாட்டுக்கறி மட்டும் தப்புன்னு முயல்கறி தின்னுகிட்டே சொல்வான் பாருங்க அவன்தான் விஷம்.


சரி எதுக்கு இப்ப இங்க தாலி & மாட்டுக்கறி.  ஆங், நல்ல கேள்வி, அந்த மூணாவது பாயிண்ட்காரர்தான் இந்த விஷயங்கள்ல என் கண்ணைத் திறந்தவர்.  கண்ணை மூடிக்கிட்டே திட்டுறதா இருந்தா வேணும்ன்னா அவரையும் சதா திட்டி முழுவேக்காடு லிஸ்ட்ல போய்ச் சேந்துக்கோங்க  !



நாலாவது பாயிண்ட்காரங்க யாருன்னா, அவங்கல்லாம் நம்ம சேர, சோழ, பாண்டிய, பல்லவ, பாளைய வம்ச எச்சங்கள்.   ’மூவேந்தர்கள் ஆண்ட நாடு எங்க தமிழகம்’ன்ற பெருமை, ”சட்டைல பூதம் சார்” ”அதிலென்ன உனக்கு அவ்வளவு பெருமை”ன்ற விசு வசனத்துக்கு ஈடானது.  மூணு பேரும் மாத்தி மாத்தி அடிச்சிக்கிட்டு இருந்தவனுங்க, சக தமிழனைக் கொன்னவனுங்க, சக தமிழர்கள் உடமைகளை கொள்ளையடிச்சவனுங்க :( ( நன்றி -ப.சிங்காரம்)



சரி பாளையக்காரய்ங்க உத்தமனுங்களான்னு பாத்தா அவனுங்க தெலுங்கு காரங்ககிட்டயோ, மராட்டியர்ங்ககிட்டயோ, ஆற்காடு நவாப்கிட்டயோ, கிழக்கிந்தயக் கம்பெனிக்கோ அடிமைகளாக இருந்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் காட்டிகொடுப்பவர்களாக, கூட்டிக் கொடுப்பவர்களாக இருந்தவர்கள்.  தங்கள் சாதி அல்லது தங்களுக்கு பயந்தோ, பணிந்தோ இருப்பவர்களை மட்டும் வாட்டாமல் விட்டவர்கள்



காவிரியாற்று புண்ணியத்தில் சோழ நாடு வேண்டுமானால் வளமாக இருந்திருக்கலாமேயன்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் எல்லாமே பல்லாயிரம் வருடங்களாக வானம் பார்த்த பூமியாகவே வைத்திருந்த புண்ணியவான்கள்தான் அவர்கள்.



வெள்ளைக்காரன் கால ஆட்சியில் கூட லட்சக்கணக்கில் பட்டினிச்சாவு நேர்ந்த கடும்பஞ்சம் கண்ட பூமி நம் தமிழகம்.  அப்போது தமிழகத்தை பல நூறு ஜமீன்கள் ஆண்டுக் கொண்டிருந்திருக்கலாம், அவனுடையா சாதி ஆட்களுக்கு மட்டுமே அவன் அன்னச்சத்திரங்களும், கோயில் கீயில் கட்டி வேலை வாய்ப்புகள் கொடுத்திருக்கலாமேயன்றி, ஏனையோர் கால்நடைகளுடன் சேர்ந்து துடிதுடித்து மரித்திருப்பார்கள்.


Image result for seeman
நாடு விடுதலையான பிறகே, எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் என்கிற சித்தாந்தத்தில்  ஓரளவாவது பிற சாதிகள் முன்னேற முடிந்தது.  இந்த தமிழ்த்தேசிய வியாதிகள், மீண்டும் இங்கு அத்தைகைய ஆதிக்கச் சாதியாட்சி முறையை கொண்டுவர பார்க்கிறதுகள் :(


அட இப்போது இங்கு நடக்கும் ஆட்சியே சோழ ஆட்சிதான் எனினும், அவர்களையும் மீறி, அம்பேத்கர் சட்டத்தால் கொஞ்சமேனும் பிற ஒடுக்கப்பட்ட சாதியினர் சலுகைகளை அனுபவிக்க முடிகிறதல்லவா, அதற்கும் மூடுவிழா செய்து, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடத் துடிப்பதுகள்தான் முப்பாட்டனின் கெளபீனங்கள் :(



சரி, அந்தக் கட்டுரையில் என்ன விசேஷம் என பார்ப்போம்.


காந்தியை பிரிட்டிஷ் கைக்கூலி என விமர்சித்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவை, “ஏஞ்சாமி இப்படிச் சொன்னீங்க ?” என்று பரிதாபமாக வினவியாவாறே கட்டுரையை ஆரம்பிக்கிறார் பெ.சிதம்பரநாதன்.


// இந்தியர்களூக்கான சுதந்திரத்தை கனவு கூடக் காணக்கூடாதெனபது பிரிட்டீஷ் கட்டளை.   அனைத்து இந்தியர்களும் அடிமையாகத்தான் இருக்க வேண்டும், குமாஸ்தாக்களாகத்தான் பணி செய்ய வேண்டும்.   இந்தியாவில் விளைகின்ற பருத்தியை லண்டனிலுள்ள மான்செஸ்டருக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும், அங்கே ஜவுளியாக அது மாறி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இதை எதிர்க்கக் கூடாது.   பஞ்சம் வந்தால் பட்டினி கிடந்து சாக வேண்டுமேயன்றி  அரிசி கொடு என்று அரசிடம் கேட்கக் கூடாது.


ஐரோப்பா போயிருந்த நேருவை தன்னை வந்து சந்திக்குமாறு பிரிட்டிஷ் அரசின் சிம்ம சொப்பனம் ’ஹிட்லர்’ தூது அனுப்ப, நேரு காந்தியிடம், ’போய்ப் பார்க்கவா ?’ எனக் கேட்டாராம்.


“எதிரியின் எதிரி நண்பன் என்கின்ற போதிலும் ஹிட்லர் சர்வாதிகாரி, கொலைவெறியர்.  அந்த ஆட்கொல்லி சர்வாதிகாரிக்கு நம் நாடும், மக்களும் ஆட்டுக்குட்டிகளாகத்தான் தெரியும், சப்புகொட்டிக் கொண்டு, ரத்தருசியுடன் இங்குலாவ வரும், எதிரி என்றாலும் பிரிட்டீஷார் ஓரளவு மனித உணர்வுகளை மதிப்பவர்கள், எனவே வேண்டாம்”(ஆனால் நேதாஜி காந்தியின் இத்தகைய கருத்துக்களை வெறுத்து ஹிட்லரைச் சந்தித்தார், ஆனால் இந்தக் கட்ஜூ அவரையும் ஜப்பான் ஏஜெண்ட் எனச் சொன்னதுதான் கொடுமை :( )


காந்தி பிரிட்டீஷ் கைக்கூலி என்றால், அந்தக் கூலியை வாங்கி தம் மூன்று மகன்களுக்கும் பங்களாக்கள் கட்டிக் கொடுத்தாரா ?  கஸ்தூரிபாவை வைரத்தால் அலங்கரித்தாரா ?  படகுக்காரில் குடும்பச் சகிதமாய் பவனி வந்துக்  கொண்டிருந்தாரா ?


ஒன்று மட்டும் நிச்சயம், இங்கு கோட்ஸேக்கு கோயில் கட்டலாம், காந்தியை வெள்ளைக்காரனின் கைக்கூலி என வர்ணிக்கலாம், இதற்குக் காரணம் இந்தியாவில் விடுதலையுணர்வு அணைக்கட்டு நிரம்பி வழிவதைப் போல வழிந்துக்கொண்டிருப்பதுதான்.  பல நாடுகளில் அந்த அணைக்கட்டிற்குள் தண்ணீரையே பார்க்க முடியாது //


(இந்த அணைக்கட்டு, தண்ணீருக்காகத்தாஞ்ச் சாமி இம்புட்டு நீள கட்டுரை)


முற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!