பெரியாரின் அதிர்ச்சி வைத்தியம்
ஒரு சிறு குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வோம்.
என்னதான் பெரியார் விரும்பியாக இருந்தாலும், இந்தத் தாலி அகற்றும் சடங்கெல்லாம் தேவையில்லாதது என்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்துமேயில்லை.
பிறகேன் இவர்கள்(திராவிட கழகத்தினர்) இதை வலுக்கட்டாயமாக செய்கின்றனர் என்றால் பெரியாரின் அதிர்ச்சி வைத்திய முறை இதுதானாம் !
இப்போதைக்கு இவர்களுக்கு வேறு தொழில் இல்லையென்பதும் மறுக்க முடியாத உண்மை.
அந்தக்காலத்தில் ஏதுமறியா அப்பாவிகளை மனு தர்மம், ஸாண்டில்ய சாஸ்திரம், வேதங்களையெல்லாம் மேற்கோள் காட்டி பயங்காட்டிப் பார்த்த ஒரு சில இனங்களின் தோலுரிக்க பெரியார் மேற்கொண்டதுதான் பல அதிர்ச்சி முறைகள்.
முதலில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். திருமணங்களிலும் தேவையற்ற சடங்குகள் எதுவுமே தேவையில்லை, எந்தப் பண்டிதர்களின் உதவியேயில்லாமல் நம் திருமணங்களை நடத்திக் கொள்ள வேண்டுமென்றுதான் அவர் சுய மரியாதை திருமணங்களை ஊக்குவித்தார். அப்படிப்பட்ட நிறைய திருமணங்களை நடத்தியும் வைத்தார்.
அத்தகைய திருமணங்களில் தாலி கட்டும் வைபவம் இருக்காது. யார் கால்களிலும் விழும் சடங்குகளும் கிடையாது. எந்தப் பண்டிதர்களும் அமர்ந்து தீக்குண்டத்தில் தீ வளர்த்து வேதங்கள் ஓதத் தேவையில்லை. குடும்பத்தில் மூத்த உறுப்பினர் அல்லது பிடித்த தலைவரால் திருமண ஒப்பந்தம் வாசிக்கப்படும். மணத் தம்பதியர் மாலைகள் மாற்றிக்கொள்வர், வருகையாளர்கள் ஒங்கி எழுப்பும் கைதட்டுமோசையே மங்கல வாத்தியமாய் பாவிக்கப்படும்.
இதன் நோக்கம் தாலி, அக்னி, ஐயர், வேதம், இவைகளெல்லாம் இல்லாமல் திருமணம் நடந்தாலும் திருமண பந்தம் நீடிக்கும், வீரியமான வாரிசுகள் உருவாகும், அத்தைகைய திருமணமும் செல்லும் என்பதற்காகத்தான் !
இத்தகைய திருமணங்கள், எத்தனையோ ஏழைகளுக்கு பெரு வரமாய் அமைந்ததில் எந்த வியப்புமில்லை. இப்படித் திருமணம் புரிந்தவர்களின் வாழ்வும், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவர்களின் வாழ்வைக் காட்டிலும் சிறப்புறவே இருந்தும் வந்தது.
பிறகெப்படி இன்றும் நடக்கும் இப்படிப்பட்ட சுயமரியாதை திருமணங்களில் கூட ஆடம்பரமும், சில தவிர்க்கப்பட்ட சடங்குகளும் நுழைந்தன ?
எல்லாம் நாடு வளர்ந்த வளர்ச்சியினாலும், வரலாறை / இலக்கியத்தைப் புறக்கணிக்க வைத்து அரைகுறையாய்க் கிட்டிய கல்விமுறையும், பணப் புழக்கமுமே காரணம் எனலாம்.
பலர் அயராமல் போராடி வாங்கித் தந்த உரிமைகளினால் கிட்டிய நியாயமான சம்பளம், கூலி, உரிய விலை என பலருக்கும், பலவற்றிலும் கிட்டிவிட, பணம் சேர்ந்தவுடன் மனிதனுக்கு பயமும் வந்தது !
பயம் வந்தவுடன் அந்தப் பயத்தை பணமாக்க, சிலர் ஆன்மீக வலைகளையே தந்திரமாக விரித்தனர். பழைய குருடி கதவைத் திறடிக் கதையாய் திடுமென பிரதோஷம், கிரிவலம், அஷ்டமி, நவமி, சஷ்டி, திதி, கண்டச் சனி, ஜென்மச் சனி, அந்த பாபா, இந்த பாபா, என எதற்கும் எந்த அர்த்தத்தையும் தெரிந்துக் கொள்ளக்கூட விருப்பமில்லாமல், தந்திரவாதிகள் சொன்னதை அப்படியே கேட்டு, பரிகாரங்களை செய்ய ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில், பணக்காரர்களின் சுய மரியாதைத் திருமணத்தில் தங்கத் தாலி நுழைந்தது, குத்து விளக்குகள் நுழைந்தது, மங்கல வாத்தியங்கள் நுழைந்தது, கச்சேரிகள் நுழைந்தது, ஊரெல்லாம் அழைத்து பல்சுவை விருந்து படைக்க ஆரம்பித்தனர், ஆனாலும் பண்டிதர்கள் வேதமோதாமல், கட்சித் தலைவர்களோ, அவர்களின் சமுதாயப் பெரியவர்களோ மட்டும் திருமணத்தி நடத்திவைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்தது,
அதற்கும் இப்போது பெரும்பாலும் ஆப்பை வைத்தாயிற்று.
சுய மரியாதை திருமணங்களினால் உண்டான வாரிசுகளின் பலரின் திருமணங்களை பண்டிதர்கள் தீ வளர்த்து நடத்தி வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை பெற்றோர்கள் காலில் விழுவதைக் கூட சுய மரியாதைக்கிழுக்கு என்று வளர்ந்தவர்கள் எல்லோர்க் கால்களிலும் தாராளமாக வீழ்ந்தார்கள், தெரியாத அருந்ததியை கண்டதாய் சொன்னார்கள், காசி யாத்திரைக்கு செம்புடன் செல்ல ஆரம்பித்தார்கள்.
”பாவி, இவ்வளவு நாள் பகுத்தறிவு, சுய மரியாதை என தீட்டுப்பட்டு விட்டாயே, போ உன் சிறுநீரால் உன்னை நாசமாக்கிய அக் கிழவனுக்கு அபிஷேகம் செய், சேறு படிந்த செருப்பாலடி” என பார்ப்பனீயப் பிரியர்கள் தூண்ட, அதையும் எந்தக் கேள்வியும் கேட்காமல், எதற்கெனவும் தெரியாமலயே, கிழவனாருக்கு சிறு நீரபிஷேகம் செய்கின்றனர்.
இந்தச் சிறப்புகள் நாளை காந்தி, பாரதி, படேல், நேரு, நேதாஜி, காமராஜர், மொரார்ஜி, அம்பேத்கர், ஜீவா, கக்கன்........ போன்றோர் படங்களுக்கும் கிடைக்கக்கூடும், நமக்குத்தான் வரலாறுகளை படிக்க நேரமில்லையே ? இருக்கும் வரலாறுகளும் திரிக்கப்பட்டவை என்றல்லவா சிலர் தூண்டி விட்டிருக்கிறார்கள் ? ’அவன் சொல்வான், இவன் செய்வான்’ அவ்வளவுதானே இவர்கள் கான்ஸெப்ட்.
பெரியார் அன்று நடத்தி வைத்த சுயமரியாதை திருமணங்களில் தாலி இருக்காது என்று சொன்னேனில்லையா, ஒரு சில திருமணங்களில் மணமகள் மணமகனுக்கு தாலி கட்டியதுமுண்டாம். உண்மையில் இதுதான் புரட்சி. முள்ளை முள்ளால் எடுப்பது.
ஆம், தாலி புனித வேலிதான். பாதுகாப்பு கவசம்தான். கற்புக்கு முழு உத்திரவாதம் தாலிதான் என்றால் அதை பொதுப்படுத்தி இருபாலரும் அணிவதே சிறந்தது. ஆணுக்கு பெண்ணும் தாலி கட்டி, அதை ஆணும் எப்போதும் கழுத்திலேயே அணிந்திருப்பதுதான் அவனுடைய கற்புக்கும் சிறந்த ஆயுதம் என்று பெண்களும் நம்பத் தூண்ட வேண்டும்.
மணமான ஹிந்துப் பெண், நெற்றி நிறைய குங்குமம் வைப்பது போல ஆண்களும் வைக்க வேண்டும், மணமான பெண்கள் என்றவுடன் அவளுக்கு தனித்த அடையாளம் உருவாகிவிடுவதைப் போல மணமான ஆண் எனில் அவனுக்கும் இது போலொரு அடையாளங்கள் உருவாக்கப்பட வேண்டும், இதற்கு பெண்கள் மட்டுமே போராட வேண்டும். மணமகன்களுக்கு மெட்டி அணியும் பழக்கமிருந்ததாம், இருக்கிறதாம், ஆனால் எந்த மணமானவனும் மெட்டி அணிந்துக் கொண்டு வீதியில் உலவுவதை இதுநாள் வரை நான் கண்டதில்லை.
ஆக, வீரமணி குழுமம், தாலி கட்டிக்கொண்டிருக்கும் பெண்கள், பதிலுக்கு அவர்களின் இணைக்கு தாலி கட்டுவதைப் போல் சடங்கு நடத்தியிருக்க வேண்டும். தாலி கட்டியவுடன் குங்குமத்தை அள்ளி அவர்களின் நெற்றியில் இடும் சடங்கையும் நிறைவேற்றியிருக்க வேண்டும். இதில் இரண்டு லாபங்கள். இங்கு ஆணிற்கு சமானமான நிலையில் பெண் இருப்பாள், இச் சடங்கிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஹிந்து முன்னணி ராமகோபாலனும், சிவசேனைக் கட்சியினரும் வந்திருப்பார்கள்.
காவல் துறையினரின் தள்ளுமுள்ளுமிருந்திருக்காது, விடுமுறை நாளில் தூங்கிக் கொண்டிருந்த சிறப்பமர்வு நீதிபதிகளின் தூக்கமும் கெட்டிருக்காது !!!
கருத்துகள்
கருத்துரையிடுக